மலாக்காவில் 14 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில், அவள் “மஷ்ரூம் வேப்” பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“மஷ்ரூம் வேப்” என்பது வேப் திரவத்தில் கலக்கப்படும் ஒருவகையான செயற்கை போதைப் பொருள் ஆகும்.
இந்த வேப்பை தனது 17 வயது காதலனிடமிருந்து அவர் பெற்றிருக்கலாம் என மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
தனது வளர்ப்புத் தாயார், வெளியே செல்ல அனுமதிக்காததால், மனஅழுத்தத்தில் இருந்த அச்சிறுமி, வீட்டின் அறைக்குள் சென்று கத்தியை பயன்படுத்தி தனது கைகள் மற்றும் கழுத்தில் காயம் ஏற்படுத்திக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி சிகிச்சைக்குப் பிறகு நிலைமை சீராகி வீடு திரும்பியதாகவும் சுல்கைரி தெரிவித்துள்ளார்.








