கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-ல், ஆறு கிப்பொன் வகை குரங்குகளை உயிருடன் கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சிறிய கூண்டுகளில் அடைத்து, ஒரு பயணப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அரிய விலங்குகள், வழக்கமான பயணப் பெட்டிகள் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கேஎல்ஐஏ-வின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, விமானப் பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் ஸ்கேனர் மூலம் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான படம் பதிவானதைத் தொடர்ந்து இந்த கடத்தல் முயற்சி தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வனவிலங்குகள் மற்றும் தேசியப் பூங்கா துறையான பெர்ஹிலிதான் மற்றும் விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட பயணியை அடையாளம் கண்டு, விமானம் புறப்படுவதற்கு முன்பே கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டதாக கேஎல்ஐஏ தெரிவித்துள்ளது.








