சைபர்ஜெயா, ஜூலை.28-
நாட்டில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கு முன்னணி செயற்கை நுண்ணறிவான AI மென்பொருட்களுக்கான 3 மாத கால இலவச சந்தா சலுகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று சைபர் ஜெயாவில் Menara Cyber Axis கட்டடத்தில் 'ஏஐ மலேசியா' (AI Malaysia) தொடக்க விழாவிற்கு தலைமையேற்று பேசிய பிரதமர், 'ராக்யாட் டிஜிட்டல்' (Rakyat Digital) தளத்தின் கீழ் வழங்கப்படும் 'AI கல்வியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும் என்றார். நாட்டின் இலக்கவியல் அமைச்சு இதற்கான பாடத்திட்டங்களை வடிவமைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் Deo உட்பட இலக்கவியல் அமைச்சின் முக்கிய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற AI Malasia தொடக்க விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், 'ஏஐ பாதுகாப்பு' , 'ஜெனரேட்டிவ் ஏஐ' (Generative AI) மற்றும் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' போன்ற நவீனத் தொழில்நுட்பக் கல்வி இளையோர்களுக்கு போதிக்கப்படும் என்றார்.
நாட்டின் அதிவேக டிஜிட்டல் வளர்ச்சியில் யாரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கில், இந்தத் திட்டம், நாட்டின் சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேதியன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது என்பதையும் பிரதமர் விளக்கினார்.








