மாரான், ஜூலை.28-
பகாங், மாரான்-தெமர்லோ சாலையில், Kampung Paya Pasir அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குனர் சலாஹுதீன் ஈசா வெளியிட்ட அறிக்கையில், இன்று அதிகாலை 5:40 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பெண்கள் பயணித்த Perodua Myvi காரும், மூன்று ஆண்கள் பயணித்த Perodua Alza எம்பிவி ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
காரில் பயணித்த இரு பெண்களும், எம்பிவி வாகனத்தில் பயணித்த ஓர் ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்த அவசர அழைப்பைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த மாரான் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டனர்.
படுகாயமடைந்த எம்பிவி வாகன ஓட்டுநர் உட்பட இருவர் சிகிச்சைக்காகத் தெமர்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளையில், பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.








