மலேசிய இந்திய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மனித வள அமைச்சு மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகம் இணைந்து ‘வெற்றி மடானி’ எனும் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், கந்தையா மண்டபத்தில், வெற்றி மடானி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இத்திட்டத்திற்காக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 2,000 இந்தியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவான AI, சைபர் பாதுகாப்பு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தரவுத் தொழில்நுட்பம் போன்ற எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்ட பயிற்சிகள் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.
இது வெறும் பயிற்சி மட்டுமல்லாமல், பயிற்சியை முடிப்பவர்கள் தகுந்த வேலைவாய்ப்பைப் பெறுவதையும் வருமானத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.
கடந்த 2024 முதல் 2025 வரை 'மிசி' (MISI) திட்டத்தின் கீழ் 8,700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஏற்கனவே பயனடைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த 'வெற்றி மடானி' திட்டம் அமைகிறது என்பதை ரமணன் தெளிவுபடுத்தினார்.
மலேசிய இந்திய சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என்பதையும், எவரையும் கைவிடாத 'மடானி' அரசாங்கத்தின் கொள்கையையும் இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது என டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
இந்த வெற்றி மடானி திட்டம் உண்மையிலேயே பலன் அளிக்க வல்லது என்று நிகழ்வில் கலந்து கொண்ட கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சை சேர்ந்த சங்கர் முனியாண்டி தெரிவித்தார்.
இந்த வெற்றி மடானி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளை இந்திய சமுதாயத்தை சேர்ந்த இளையோர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கிள்ளானைச் சேர்ந்த அரிவிந்த் சங்கரன் கேட்டுக்கொண்டார்.
இந்த வெற்றி மடானி தொடக்கவிழாவில் மனித வள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோஃப், துணை தலைமைச் செயலாளர் டாக்டர் முகமட் ஷாஹரின் உமர், மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகம். இயக்குநர்கள் வாரியத் தலைவர் டத்தோ ரஸ்லி ஜாஃபர், மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகம். தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் ஷமீர் அப்துல் அஜிஸ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.












