நாளை ஜூன் 11 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை முன்னிட்டு, நாடு தழுவிய அளவில் சட்டவிரோத சூதாட்டங்களை ஒடுக்க ‘ஓப் சோகா 11’ எனும் அதிரடி வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
இணையவழி மற்றும் நேரடிச் சூதாட்டங்களில் ஈடுபடும் கும்பல்களின் ஏஜெண்டுகள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் எச்சரித்துள்ளார்.
இந்தச் சிறப்பு நடவடிக்கையின் கீழ், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி , பேங்க் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து சூதாட்ட இணையப்பக்கங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் முடக்கப்படும் என்று டத்தோ குமார் நினைவுறுத்தினார்.
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது 1953 ஆம் ஆண்டு திறந்தவெளி சூதாட்ட விடுதிகள் சட்டம் மற்றும் கறுப்புப் பண ஒழிப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்பதால், பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று டத்தோ குமார் கேட்டுக்கொண்டார்.








