சுங்கை பட்டாணி, பிப்ரவரி.24-
நாட்டின் அரசியல் அமைப்புக்கு அடித்தளமாக இருப்பதே மக்கள்தான். அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல மக்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதனை ஆய்வுச் செய்து அவர்களுக்கு அத்தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் கெடா மாநில மக்கள் நீதி கட்சியின் துணைத் தலைவருமான டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஆய்வில் இளைஞர்கள் நல்ல பொருளாதார வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்று அறிய வந்ததாக அமைச்சர் தௌஃபிக் ஜோஹாரி தெரிவித்தார். அதற்காக 2026 ஆம் ஆண்டில் புதிய முயற்சியாக Geran Sejati Madani அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மலேசியா முழுவதும் பதிவுச் செய்யப்பட்ட 2,500 இளைஞர் அமைப்புகளுக்குத் தலா வெ 100,000.00 வரை மானியத்தை விண்ணப்பிக்கலாம். இந்த நிதி நிகழ்ச்சிகளுக்காக அல்ல புதிய வணிகம் அல்லது வருமானம் உருவாக்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மேலும், இளைஞர்கள் அரசியல்களை மட்டும் நம்பாமல், தங்களின் திறன் மற்றும் சிந்தனையின் மூலம் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். இந்த ஆண்டு 100,000.00 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்ட அமைப்புகள் அடுத்தாண்டில் 500,000 லட்சம் ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரை வருமானம் உருவாக்கும் நிலைக்கு வளர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றார். இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
அரசாங்கம் 250 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கீட்டின் மூலம் 2,500 இளைஞர் அமைப்புகள் பயன் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் இளைஞர்கள் தேவைகளைத் தொடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் மனநிலையை அரசு புரிந்த கொள்கிறது என்பதையும் இத்திட்டம் குறிக்கின்றது என்றார் அமைச்சர் தௌஃபிக் ஜோஹாரி.








