பெங்காலான் உலு, ஏப்ரல்.11-
மலேசியா - தாய்லாந்து எல்லையில் உள்ள புக்கிட் பெராபிட் குடிநுழைவு, சுங்கம், பாதுகாப்பு வளாகத்தை நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டுவதற்கான திட்டம் தற்போது சாத்தியக்கூறு ஆய்வு மட்டத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இதற்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிந்தவுடன் புதிய வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனவும், இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு எல்லைப் பாதுகாப்பையும் பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் 122 எல்லை நுழைவு வாயில்களின் பாதுகாப்பையும் சீரமைக்கும் நோக்கில், இந்த வளாகத்தின் செயல்பாடுகளைப் படிப்படியாக AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் கீழ் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.








