வேலை இழப்பை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருளாதார மீள்திறன் தொகுப்பு அமல்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு திறன் மற்றும் வேலைவாய்ப்புக்கான முன்னேற்ற விரைவு திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் உரையாற்றிய அன்வார்,தற்போது தொழிலாளர் சந்தை வலுவாக இருந்தாலும் கூட, நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறி வரும் சூழலில், தொழிலாளர்கள் போட்டித்திறனுடன் இருக்க வேண்டும் என்றும், வேலை இழக்கும் நிலை ஏற்பட்டால், தற்போதைய தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திறன்களில் மீள் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொருளாதார நிலைத்தன்மை திட்டம், மனித வள மேம்பாடு மற்றும் தொழிலாளர் சந்தை நிலைத்தன்மைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








