புத்ராஜெயா, பிப்ரவரி.03-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்த 8.5 பில்லியன் ரிங்கிட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நிதி அமைச்சே முடிவு செய்யும் என அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
லஞ்சம் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்து அரசுடன் ஒப்படைப்பதே தங்களின் பணி என்றும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது நிதி அமைச்சின் பொறுப்பு என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு அமைப்பான Malaysia Corruption Watch எனும் MCW, நேற்று திங்களன்று கூறுகையில், ஊழல் மூலம் ஈட்டப்பட்ட 8.5 பில்லியன் ரிங்கிட் தொகையை எஸ்பிஆர்எம் மீட்டெடுத்தது என்பது, அந்தப் பணம் பொதுமக்களுக்கு வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தது. மேலும், இந்த ஊழல்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படுவதையும் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.








