நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்காக வழங்கப்பட்ட தொகுதி ஒதுக்கீட்டுப் பணத்தை திருப்பி அளிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அருள் குமார் கூறுகையில், இந்த நிதி பொதுமக்கள் நலனுக்காக பள்ளிகள், சங்கங்கள், ருக்குன் தெத்தாங்கா அமைப்புகள் மற்றும் கிராம வளர்ச்சி, பாதுகாப்புக் குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானின் 10 சட்டமன்ற உறுப்பினர்களும், லாபு மற்றும் பாரோய் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் தலா 1 லட்சத்து 74 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணம் மாதந்தோறும் அல்ல, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகக் கூறிய அருள் குமார், செலவின அறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயன்படுத்தப்படாத மீதிப் பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.








