நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள ‘டீம் லோ’ என அழைக்கப்படும் 10 மலேசியர்கள், வெள்ளம் தாக்கியபோது பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பத்து பேரின் பயணத்தை ஏற்பாடு செய்த பயண நிறுவனத்திடமிருந்து தாம் இந்த தகவலை பெற்றதாக மலேசிய பொழுதுபோக்கு மன்றத் தலைவர் முகமது நூர் அஸ்ருல் சே கூறினார்.
அந்த 10 பேரும் காட்மாண்டுவிலிருந்து நேபாளம்–திபெத் எல்லையை நோக்கி இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பயணித்ததாகவும், அவர்கள் சென்ற பாதை பள்ளத்தாக்கு வழியாக இருந்ததால் வெள்ளநீர் பெருக்கில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அவர்கள் நேபாளம்–திபெத் எல்லையிலிருந்து இன்னும் 81 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், காலை 9 அல்லது 10 மணிக்கு வெள்ளநீர் பெருக்கெடுப்பதற்கு முன்பாக அவர்கள் எல்லையைக் கடந்திருந்தால் பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாயமான மலேசியர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை நேபாள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், அப்பகுதியின் அபாயகரமான நில அமைப்பு மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.








