ஆட்சி அமைப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை அளவுக்கு அதிகமாக நம்பிய முந்தைய அனுபவங்களில் இருந்து பக்காத்தான் ஹராப்பான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜசெக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரான அவர் கூறுகையில், பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருந்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், தேவைப்படும் நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறும் நிலை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் அமினுடின் ஹருனுக்கு பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கியதையும், பின்னர் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முதல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து பெர்சத்து விலகிய “ஷெரட்டன் நகர்வு” சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
தற்போது மத்திய அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலும் பக்காத்தான் ஹராப்பானும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், சொந்த பலத்தை வலுப்படுத்துவதிலேயே பக்காத்தான் ஹராப்பான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.








