கெடா,சிக், கம்போங் தஞ்சோங் சேதார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைந்திருந்த பழைய இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன.
தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர், முதலில் வெடிகுண்டைப் போன்ற ஒரு பொருளைக் கண்டதும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார் என சிக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஷாம்சூரி சாமான் தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையில், அது 60 மில்லிமீட்டர் அளவிலான பழைய மோட்டார் வகை வெடிக்காத குண்டு என தெரியவந்தது.
பின்னர் வெடிகுண்டு அழிப்புப் பிரிவினர் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி நடத்திய சோதனையில், அருகிலேயே மேலும் 81 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு குண்டுகளும் நேற்று பிற்பகல் இரண்டு கட்டங்களாக பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின்போது எந்த அசம்பாவிதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை.








