மலாக்கா மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமட் அலி பின் முகமட் ருஸ்தாம் அவர்களின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குளோபல் ஃபோர்ஸ் செக்யூரிட்டி செண்டிரியான் பெர்ஹாட் மற்றும் டி.பி.பி. டிரேடிங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனங்களின் இயக்குநரான டத்தோ டாக்டர் விஸ்வநாதன் என்ற விஸ்வா த/பெ ஆனந்தன் அவர்களுக்கு டி.பி.எஸ்.எம் எனும் டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர், ச்சாஆ, சிகாமாட்டில் பிறந்த டத்தோ டாக்டர் விஸ்வநாதன், தமிழ்ப்பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் மேற்கல்வியைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.
ஆரம்பக் காலத்தில் காப்புறுதி நிறுவன முகவராகப் பணியாற்றிய அவர், தனது கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் பின்னர் சொந்தமாக ஒரு பாதுகாவலர் சேவை நிறுவனத்தைத் தொடங்கினார்.

தொடக்கக் காலத்தில் வெறும் 40 ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கிய அந்த நிறுவனம், இன்று 1,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வெற்றிகரமான நிறுவனமாக உயர்ந்துள்ளது.
தொழில் வெற்றியுடன் சமூகப் பொறுப்பையும் மறக்காத டத்தோ டாக்டர் விஸ்வநாதன், பல தமிழ்ப்பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு நன்கொடைகள் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆலயங்களுக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கும் தொடர்ந்து பல்வேறு நிதி மற்றும் நல உதவிகளை வழங்கி வருகிறார்.

அவரது இந்த மகத்தான வெற்றிப் பயணத்தில், அன்புத் துணைவியார் டத்தின் புனிதா மற்றும் பிள்ளைகள் உறுதுணையாக இருந்து பக்கபலமாக விளங்கி வருகின்றனர்.
உழைப்பால் உயர்ந்து, பலருக்கும் வாழ்வாதாரம் வழங்கி, சமூக சேவையிலும் தம்மை அர்ப்பணித்துள்ள டத்தோ டாக்டர் விஸ்வநாதன் அவர்களின் சாதனைப் பயணம் தொடரும் நிலையில் அவருக்கு டி.பி.எஸ்.எம் எனும் உயரிய அந்தஸ்தை தங்கிய டத்தோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது.









