முன்னாள் மனிதவள அமைச்சரும், மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய டத்தோஸ்ரீ சரவணன், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தம்மைச் சிக்க வைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2020 மார்ச் முதல் 2022 நவம்பர் வரை மனிதவள அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டதாக சரவணன் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்ட முதலாளிகள், மத்தியப்படுத்தப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை முறையின் மூலம் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஒரு சென் கூட தாம் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.
2022-இல் கைது செய்யப்பட்ட ஒருவரை, தம்முடன் தொடர்புபடுத்தும் வகையில் சத்தியப்பிரமாண வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் சரவணன் குற்றஞ்சாட்டினார்.
நீதித்துறை மீது முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறிய சரவணன், , இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்








