நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 55 மலேசியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை நேபாள அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த தகவல் பயண முகவர்களிடமிருந்து கிடைத்ததாகவும், காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் பெயர்ப் பட்டியலைத் திரட்டி சரிபார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், காணாமல் போனோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேபாள பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முகமட் ஹசான் கூறினார்.
வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் அழிந்துள்ளதால் மீட்புப் பணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








