கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.எ டெர்மினல் 2-இல் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தின் சக்கரப் பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம், ஏற்கனவே அழுகத் தொடங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலைய நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்திடமிருந்து காலை சுமார் 7 மணியளவில் தகவல் கிடைத்ததாக கே.எல்.ஐ.எ மாவட்ட போலீஸ் தலைவர் எம். ரவி கூறினார்.
விமானத்தின் வலது பக்க சக்கரத்தை உள்வாங்கும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முகம் கீழ்நோக்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்ததாக அவர் தெரிவித்தார்.
உடல் அமைப்பின் அடிப்படையில், உயிரிழந்தவர் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
அவர் வெள்ளை நிற ‘ஹூடி’, நீல நிற ஜீன்ஸ், பழுப்பு நிற தோல் பெல்ட் மற்றும் கருப்பு நிற விளையாட்டு காலணிகளை அணிந்திருந்தார். உடன் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று எம். ரவி தெரிவித்தார்.








