சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட “ஒப்ஸ் காளி மெகா” அதிரடி நடவடிக்கையில், கிட்டத்தட்ட 11 கோடியே 90 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், 10 மாநிலங்களில் உள்ள 45 சுரங்கப் பகுதிகள் சோதனையிடப்பட்டதாக அவர் கூறினார். இதில் 24 இடங்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சபாவில் அதிகபட்சமாக 14 சட்டவிரோத சுரங்கங்களும், சரவாக்கில் 7 மற்றும் கிளாந்தானில் 3 சுரங்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், 55 வாகனங்கள், 87 கனரக இயந்திரங்கள் மற்றும் 194 சுரங்க உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 61 மலேசியர்கள் மற்றும் 38 ஆவணங்களற்ற வெளிநாட்டவர்கள் உட்பட 99 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இன்று புக்கிட் அமான் போலீஸ் த லைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் யுஸ்ரி கூறினார்.
சட்டவிரோத சுரங்கங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 32 தனிநபர்கள் மற்றும் 21 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் வரி ஏய்ப்பு மற்றும் அரசின் வருவாய் இழப்பு தொடர்பான விசாரணைக்காக வருமான வரி வாரியமான எல்.ஹெச்.டி.என்-னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








