கடந்த இரண்டு ஆண்டுகளில் வருவாய் கசிவுகள் மூலம் மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட் தொகையானது, தற்போது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது, தொடர்ந்து மக்களுக்குத் அரசாங்க சலுகைகளை வழங்க உதவுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் இத்தொகை மீட்கப்பட்டதாகவும், அந்த தொகை தேவையுடைய மக்களிடம் திருப்பி வழங்கப்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
சிலரின் கைகளில் இருந்து கசிந்த அந்த தொகை எவ்வாறு மீட்கப்பட்டது என்பதை கிராமப்புற மக்களும், ஃபெல்டா குடியிருப்புகளில் வாழ்பவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உதவித் திட்டங்களுக்காக அரசாங்கம் மாதத்திற்கு சுமார் 6 பில்லியன் ரிங்கிட் செலவழித்து வருகிறது.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்ந்து நீடித்தால், இச்செலவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அன்வார் எச்சரித்துள்ளார்.








