மலேசியாவின் மூத்த ஒளிபரப்பு பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா இன்று அதிகாலை 3.30 மணியளவில், கிள்ளானில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
66 வயதான காரம் சிங், காலமான தகவலை, அவரது சகோதரர் ஜஸ்பந்த் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
காரம் சிங், மீடியா பிரைமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் பிரிவின், குழு மேலாண்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1959-ஆம் ஆண்டு பேராக் மாநிலம் தெலுக் இந்தான் பகுதியில் பிறந்த காரம் சிங், 1995ஆம் ஆண்டு டிவி3 மலேசியாவின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு பத்திரிகையாளராக தனது பணியைத் தொடங்கினார்.
உடல்நலக் காரணங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளில் சிறந்து விளங்கிய இவர், மலேசியாவின் முக்கியமான சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்களில் ஒருவராக கருதப்பட்டார்.
மேலும், இரண்டு முறை 'ஸ்ரீ அங்காசா' விருதையும், 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகள், மலேசிய பத்திரிகை நிறுவனம் வழங்கும் சிறந்த சுற்றுச்சூழல் தொலைக்காட்சி பத்திரிகையாளர் விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது முகநூல் பதிவில், காரம் சிங் வாலியாவின் மறைவு மலேசிய பத்திரிகைத்துறைக்கு பெரிய இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.








