கெடா மாநிலம் சுங்கை பட்டாணி பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த துயரச்சம்பவத்தில், ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சு உள்விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்று துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் நிலையில், அமைச்சு மற்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளும் என்றும் வோங் கா உறுதியளித்துள்ளார்.
இந்த தகவலை நேற்று அவர் எஸ்.எம்.கே ராஜா பெர்மைசூரி பைனுன் பள்ளியில் நடைபெற்ற பள்ளி பேருந்து ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கிறிஸ்டோபர் லிங் ஜியா சியாங் மற்றும் 20 வயதுடைய ஜோயி லிங் லின் சியாங் ஆகிய இருவரும், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் பந்தாய் மெர்டேகா பகுதியில் படகோட்டத்தில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








