கோத்தா பாரு சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் புதிய முனையத்தின் புறப்பாட்டு மண்டபத்தை சில தரப்பினர், “மட் ரெம்பிட்” எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தும் மைதானமாக மாற்றியுள்ளது மிகவும் அவமானகரமானது என போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் சாடியுள்ளார்.
இந்த செயல் மிகவும் கவலைக்குரியது மற்றும் வெட்கக்கேடானது என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான சதி செயல் நடவடிக்கையாகவும் பார்க்கப்படலாம் என்றும் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கிளந்தானில் சிறந்த விமான இணைப்பை உறுதிசெய்ய, மத்திய அரசு சுமார் 450 மில்லியன் ரிங்கிட் செலவில் விமான நிலையத்தை மேம்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் விரிவான மற்றும் பெரிய அளவிலான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில சாலை போக்குவரத்து துறை அமலாக்க இயக்குநருக்கு, லோக் சியூ ஃபூக் உத்தரவிட்டுள்ளார்.








