ஜோகூர் பாரு, பிப்ரவரி.02-
ஜோகூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது குடும்பத்தினருடனும், பேரக்குழந்தைகளுடனும் அங்கு வருகை புரிந்திருந்தார்.
நேற்று கோலாலம்பூரிலிருந்து மின்சார ரயில் சேவையான ETS மூலம் ஜோகூர் பாருவுக்கு வருகை புரிந்த அன்வார், தனது குடும்பத்தினருடன் மலேசியாவின் பழமையான மிருகக்காட்சிசாலையில் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.
இது தனது அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட பயணம் என செய்தியாளர்களிடம் விவரித்த அவர், அங்கிருந்த பார்வையாளர்கள் பலர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.
இந்நிலையில், அன்வாரின் இந்த வருகையானது, ஜோகூர் மாநிலத்தின் 2026-ஆம் ஆண்டு சுற்றுலாவிற்கு மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அம்மாநில வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை தலைவர் டத்தோ முஹமட் ஜாஃப்னி முஹமட் ஷுகோர் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 மாதங்களில், ஜோகூர் உயிரியல் பூங்காவானது 1.2 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்ததோடு, கடந்த ஆண்டு மட்டும் 5.5 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் முஹமட் ஜாஃப்னி குறிப்பிட்டுள்ளார்.








