சிலாங்கூர் மாநிலத்தின் ஃபிளெக்ஸி பார்க்கிங் கைபேசி செயலியில் ஏற்பட்ட இணையத் தாக்குதல் மற்றும் தரவு கசிவு குறித்த விசாரணை அறிக்கையை அம்மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம், அதன் பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விளக்கம் அளிக்க தவறினால் மாநிலச் சிறப்புக் குழு மூலம் மக்கள் முன்னிலையில் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தத் தரவு கசிவு என்பது வெறும் வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்போடு தொடர்புடையது என்று லீ சுட்டிக்காட்டினார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த இணையத் தாக்குதலால் நாடு முழுவதும் 64 ஊராட்சி மன்றங்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப வாகன நிறுத்தக் கட்டணச் சேவை பாதிக்கப்பட்டு, நேற்றுதான் இச்செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.








