டாக்சி தொழில் துறையை நவீனமயமாக்க மூன்று புதிய திட்டங்களைப் போக்குவரத்து அமைச்சு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிள்ளான் பள்ளத்தாக்கு பொதுப் போக்குவரத்து திட்டத்தின் வழியே டாக்சி கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன என்றும், ஓட்டுநர்களுக்குப் பயிற்சிகளும் புதிய வாகன நிதியுதவிகளும் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய மடானி டாக்ஸி திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் வசதி கட் டமைப்பைக் கொண்ட 'புரோட்டான் எஸ்70' புதிய ரக கார், அதிகாரப்பூர்வ மாதிரி டாக்சி வாகனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீண்டகாலமாக இருந்த குத்தகை முறை ஒழிக்கப்பட்டு, ஓட்டுநர்களே வாகனங்களின் முழு சட்டப்பூர்வ உரிமையாளர்களாக மாறுவதற்கு நிதி அமைச்சு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், இனிவரும் புதிய டாக்ஸிகள் பாரம்பரிய கூரை விளக்குகளுக்குப் பதிலாக, "ஜிஇடி" என்ற எழுத்துக்களுடன் தொடங்கும் சிறப்புப் பதிவு எண்களைக் கொண்ட நவீன அடையாளத்தைப் பெறும் என்றும் அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.








