பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதியாக ஜொகூர்-சிங்கப்பூர் அஜெண்டா என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் எல்லைகளுக்கு இடையே தினமும் பயணம் செய்வோர் சந்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஸ்துலாங் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரான ஆண்ட்ரூ சென் கா எங் கூறுகையில் எல்லை தாண்டிப் பயணிப்பவர்களுக்காகப் பேருந்து மற்றும் பல்வேறு வகையான இரயில் சேவைகளை ஒன்றாக இணைத்து, எளிமையான ஒரு போக்குவரத்து அமைப்பை உருவாக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
எல்லைகளில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் க்யூஆர் குறியீடு மற்றும் தானியங்கி கதவுகள் நல்ல பலனைத் தந்துள்ளன. இதன் அடுத்த கட்டமாக, பயணிகளின் முகத்தை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லைச் சோதனைகளை இன்னும் வேகமாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.
மேலும், தினமும் வேலைக்காக ஜோகூரிலிருந்து எல்லை தாண்டி சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக ஸ்கூடாய், குலாய், கெம்பாஸ் மற்றும் பாசிர் கூடாங் ஆகிய முக்கியப் பகுதிகளில் இருந்து புதிய இரயில் நிலையத்திற்குச் செல்ல இணைப்புப் பேருந்து சேவைகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த ஒட்டுமொத்த போக்குவரத்துத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நெருக்கமாகச் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆண்ட்ரூ சென் தெரிவித்தார்.








