சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நாளை ஜூலை 4-ஆம் தேதி சனிக்கிழமை பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. எம்பெருமானின் திருவருளைப் பெற பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தும் பிரம்மாண்ட பால்குடத் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து இறைவன் வீதியுலா வரும் கண்கொள்ளாக் காட்சியான சப்த இரத ஊர்வலமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று வியாழக்கிழமை, ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில் அர்த்தநாரீஸ்வரர் திருவிழா பக்தி பூர்வமாக நடைபெற்றது. அண்ணாமலையாரைப் பல்லக்கில் ஏந்திய வண்ணம் நடைபெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆன்மீக நிகழ்விற்கு மெருகூட்டும் வகையில், இறைவனுக்கான பாரம்பரிய பரதநாட்டிய சமர்ப்பண நிகழ்வும் அரங்கேறியது.
விழாவின் முக்கிய அங்கமாக, நாளை காலை மணி 7.31-க்கு ஜாலான் துவாங்கு அம்புவான் நஜிஹாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டு, காலை மணி 8.31-க்கு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடைவர்.
தொடர்ந்து மாலை 6.31 மணி அளவில், பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் சப்த இரத ஊர்வலம் கோலாகலமாகத் தொடங்கும் என்று தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடாந்திரத் திருவிழாவின் உற்சவத்தையொட்டி, நாளை காலையில் வருகை தரும் சுமார் ஆயிரம் பக்தர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும், இரத ஊர்வலத்தின் போது 5-ஆம் எண் தேர் பந்தலில் பிரம்மாண்ட கலை விழாவிற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக N9 தொண்டூழியக் குழுவின் தலைவர் லிங்கேஸ்வரன் வள்ளியப்பன் தெரிவித்தார்.
தேவஸ்தானத்தின் இந்த மாபெரும் ஆன்மீகப் பெருவிழாவிற்கு மஹிமா அமைப்பின் தலைவரும், DSK குழுமத்தின் பொறுப்பாளருமான டத்தோ என். சிவகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார் என்று தேவஸ்தானம் பக்திப்பூர்வமாக அறிவித்துள்ளது.











