சிங்கப்பூரிலிருந்து கூச்சிங் செல்லவிருந்த ஏர்ஏசியா விமானத்திலிருந்து, மாற்றுத்திறனாளி சிறுமிக்கான சிறப்பு பாதுகாப்பு இருக்கையைப் பயன்படுத்திய ஒரு குடும்பத்தினர் இறக்கிவிடப்பட்ட சம்பவத்திற்கு ஏர்ஏசியா விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மே 26 அன்று நடைபெற்ற இச்சம்பவம், அப்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டது என்று ஏர்ஏசியா எக்ஸ் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ். சரவணன் தெரிவித்துள்ளார்.
பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்காக, அமெரிக்க சிவில் விமான போக்குவரத்து அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு இருக்கையை அக்குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இருக்கை விதிமுறைகளை மேலும் தெளிவுபடுத்த மறுஆய்வு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.. மேலும், பயணிகள் தங்களின் சிறப்பு இருக்கைகளுக்கான ஆவணங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.








