சிலாங்கூர் மாநிலத்தில் வணிக வளாகங்களில் பிறசமய வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள், புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போது இயங்கி வரும் வழிபாட்டுத் தலங்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மாநில அரசு திட்டவட்டமாக உறுதி அளித்துள்ளது.
பௌத்தம், கிறித்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகிய சமயங்களுக்கான 'லிமாஸ்' சிறப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வணிகப் பகுதிகளில் முறையான திட்டமிடலுடன் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதே இதன் நோக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளில் உள்ள சில கட்டுப்பாடுகள் குறித்து எழுந்துள்ள கவலைகளை அடுத்து, சமய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த வழிகாட்டுதல்கள் மறுஆய்வு செய்யப்படும் வரை, இதன் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் அனைத்துத் தரப்பினரின் சமய உரிமைகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் சிலாங்கூர் அரசு உறுதியளித்துள்ளது.








