அமைச்சுக்களில் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அதன் மூலம் சேமிக்கப்படும் ஒவ்வொரு சென்னும் நேரடியாக மக்கள் நலத்திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சபா மாநில அளவிலான காமதான் திருவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் , அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆசியான், பிரிக்ஸ் போன்ற கட்டாய மாநாடுகளைத் தவிர மற்ற பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூதுக்குழுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு, ஆடம்பர தங்குமிடங்களும் சாதாரண அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அரசுப் பயிற்சிகள் இனி நட்சத்திர ஹோட்டல்களில் நடக்காது என்றும் அவர் கூறினார். இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட் நிதி, தற்போது எஸ்டிஆர் மற்றும் சாரா போன்ற மக்கள் நிதியுதவித் திட்டங்களுக்கும், பள்ளிக்கூட கழிப்பறைகளைச் சீரமைக்கவும், மாணவர்களுக்கான புத்தக வவுச்சர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.








