கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு மற்றும் இயற்கைக்கு மாறான முறையில் துன்புறுத்திய வழக்கில், முன்னாள் ஹோட்டல் பாதுகாவலர் ஒருவருக்கு ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்தது.
இவ்வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே 25 வயது பிரசாந்த் என்ற அந்த முன்னாள் பாதுகாவலர், தன் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி ஜுரைடா அப்பாஸ் வன்புணர்வு குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறையும் 8 பிரம்படிகளும், இயற்கைக்கு மாறான பாலியல் துன்புறுத்தலுக்காக 10 ஆண்டுகள் சிறையும் 4 பிரம்படிகளும் விதித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி அதிகாலை 5.20 முதல் மாலை 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், ஹோங் செங் எஸ்டேட் சீன மயானப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெருடுவா ஆக்சியா காரினுள் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அரசுத் தரப்பு துணை அரசு வழக்கறிஞர் அன்வாருல் ஹக்கிம் தனது வாதத்தில் , "பாதிக்கப்பட்டவர் ஆஸ்திரேலிய நாட்டவர் என்பதால், இத்தகைய கொடூரக் குற்றங்கள் மலேசியாவின் அனைத்துலக புகழையும் ஆஸ்திரேலியாவுடனான இருதரப்பு உறவையும் கடுமையாகப் பாதிக்கும்" எனக் கூறி கடுமையான தண்டனை வழங்கக் கோரினார்.








