நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க, செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள மலேசியர்கள் அதை மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அறிவித்துள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையின் கீழ், வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து, ஜேபிஜே அலுவலகங்களிலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில், வெளிநாடுகளில் வேலை, வசிப்பு அல்லது பிற தேவைகளுக்காகச் செல்லும் மலேசியர்களின் பயண வசதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின் கீழ், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மலேசிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மலேசிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் பெற்ற மலேசியர்கள், மலேசியா எனது இரண்டாம் வீடு என்ற MM2H திட்டத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் தூதரகப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த மாற்றத்திற்குத் தகுதி பெறுகின்றனர்.








