மலாக்கா, ஜனவரி.07-
13 வயது பையன் ஒருன், தனது வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மலாக்கா, பத்து பெரெண்டாம், தாமான் மெர்டேக்காவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது.
அந்தப் பையனின் பெற்றோர்கள், வெளியே சென்று விட்டு முற்பகல் 11.30 மணியளவில் வீடு திரும்பிய போது, தங்கள் மகன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
முன்னதாக, வீட்டின் கதவை திறந்த போது, குளியல் அறையில் தண்ணீர் சத்தம் கேட்டு, அவர்கள் அங்கு சென்றதாகவும், கதவு தாழிட்டிருந்ததால் பல முறை அழைத்தும் எந்தவொரு பதிலும் வராததைக் கண்டு, கதவை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மகன் குளியல் அறையில் மூச்சுப் பேச்சின்றி கிடப்பதைக் கண்ட அவர்கள், பின்னர் 999 என்ற எண்ணுக்கு உதவிக் கோரியுள்ளனர். அவ்விடத்தை வந்தடைந்த மருத்துவக் குழுவினர், அந்த பையன் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் கூறுகையில் அந்தப் பையனின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.








