நெகிரி செம்பிலான், நவ.22-
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் மாநில அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு, நாளை நவம்பர் 23 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தம்பின், டேவான் அரேனா தம்பின் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
நெகிரி செம்பிலான், யாங் டி பெர்துவான் பெசார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.
நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்தியர் கலை, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளுடன் மூவின மக்களையும் வரவேற்கும் வகையில் நடத்தப்படும் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார், உண்டாங் தம்பின், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ உத்தாமா அமிருடின் ஹருண், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர்.
தம்பின் நகர் மத்தியில் பெருவிழாவாக கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு, வெகு விமரிசையாக நடைபெறவிருக்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் இந்தியர்களின் சுவைமிகுந்த பாரம்பரிய உணவு, பதார்த்த வகைகள் பரிமாறப்படுவதுடன், இன்னும் பல சிறப்பு அங்கங்களை கண்டு களிக்க மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
இது தம்பின் வட்டார மக்களுக்கு மட்டும் அல்ல, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் கேட்டுக்கொண்டார்..
நெகிரி செம்பிலான் மக்களின் ஒற்றுமையையும், நட்பையும் மேலும் வலுப்படுத்தும் பொருட்டு மாநில மடானி அரசாங்கம், தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பை ஆண்டு தோறும் இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் வீற்றிருக்கும் தொகுதிகளில் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








