இணைய மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பிரம்படி உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும் என்ற போலீசாரின் முன்மொழிவுக்கு சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மோசடிகளைத் தடுப்பதில் தண்டனைகளை மட்டும் கடுமையாக்குவது போதாது என்றும், மோசடி பணம் செல்லும் வங்கிகளும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் பிறரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, மோசடியால் ஏற்பட்ட முழு இழப்பிற்கும் அவர்களே காரணம் என வங்கிகள் கருதுவது நியாயமற்றது என்றும் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தடுக்க வங்கிகள் தங்களது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காலாவதியான சட்டங்களில் திருத்தம் செய்து, இணைய மோசடிகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு பிரம்படி உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்க போலீசார் முன்மொழிந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நீதிமன்றத் தண்டனைகள் மோசடி கும்பல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைத் தடுக்கும் அளவுக்கு கடுமையாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








