இந்தோனேசியாவின் அனாக் கிராகாத்தாவ் எரிமலைச் சாம்பலானது மலேசியாவை வந்தடையும் அபாயம் சற்று குறைவாகவே இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
தற்போதைய காற்றின் திசை மற்றும் வேகத்தின் அடிப்படையில், சாம்பல் மேகம் பெரும்பாலும் சுண்டா நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தோனேசியப் பகுதிகளில் குவிந்துள்ளதாக மெட்மலேசியா தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது எரிமலையின் தொடர் வெடிப்புகள் சாம்பலின் நகர்வை மாற்றக்கூடும் என்பதால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனாக் கிராக்காத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்புகளால் எரிமலைச் சாம்பல் பரவி, 6 விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனால் ஜகார்த்தா–கோலாலம்பூர் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
எரிமலைச் சாம்பல் மலேசிய வான்வெளியை அடைந்தால், விமானப் போக்குவரத்து முக்கியமாக பாதிக்கப்படும் என மெட்மலேசியா எச்சரித்துள்ளது.








