மலேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் திட்டம் 2026-2028 என்ற புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 2028 -ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக விமானப் போக்குவரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் எதுவும் இல்லாத நிலையை அடைவதுடன், அனைத்துலக உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான ICAO-வின் பாதுகாப்பு அமலாக்க மதிப்பெண்ணை குறைந்தது 90% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாண்டுத் திட்டம் மூலம் தீவிரமான விமானச் சம்பவங்கள் மற்றும் ஓடுபாதை பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளை குறைப்பதுடன், விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் நடைமுறையையும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை போக்குவரத்து அமைச்சு, பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ ஜனா முனயன், அமைச்சர் அந்தோணி லோக் சார்பில் மலேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கருத்தரங்கு 2026 நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ICAO உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் திட்டம் மற்றும் ஆசியா பசுபிக் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றுடன் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானப் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்கள் அதிகரிப்பது, விமானப் பாதுகாப்பு மோசமடைந்து வருவதற்கான அறிகுறி அல்ல என்றும் ஜனா முனயன் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, சிறந்த தகவல் பகிர்வு கலாசாரம் மூலம் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை விபத்துகளாக மாறுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.








