சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் ஸைனோல் ஆஃபிக் பீ ஷாமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அன்பான குணம் கொண்ட நல்ல மனிதராக நினைவுகூர்ந்துள்ளார்.
15-ஆவது பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது ஸைனோல் ஆஃபிக் தன்னை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றதை நினைவுகூர்ந்த அன்வார், விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் இறங்கிய பின்னரும் தன்னுடன் கைகுலுக்குவதை விமானி வழக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இருவரும் இணைந்து பிரார்த்தனை செய்த தருணங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“அவர் ஒரு நல்ல மனிதர். எங்களுடைய போராட்டத்தில் அவர் எங்களுக்கு பெரிதும் உதவினார். அவரது சேவையும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்,” என்று அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மறைந்த விமானியின் தந்தை பீ ஷாம் அஹ்மாட்டுடன் தொலைபேசியில் உரையாடிய அவர், குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தனது ஊழியர்களிடம் தெரிவிக்குமாறும், தேவையான உதவிகளை ஏற்பாடு செய்வதாகவும் அன்வார் உறுதியளித்துள்ளார்.








