கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
மலேசியா தீவிரவாதிகளால் கைப்பற்றப்படும் என்ற சர்ச்சைக்குரிய பதிவேற்றம் உட்பட தீவிரவாதத் தன்மையிலான உள்ளடக்கத்தைச் சமூக ஊடகங்களில் வெளியிட்ட இரண்டு நபர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
37 மற்றும் 43 வயதுடைய இரண்டு ஆடவர்கள் தங்களின் X பதிவில் தனித்தனியே வெளியிட்ட உள்ளடக்கத்தைத் தொடர்ந்து அவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
முதல் சம்பவத்தில் @chongkahtze என்ற X பயனர் ஒருவர் மலேசியா தீவிரவாதிகளால் கைப்பற்றப்படும் என்றும் நாட்டில் ஒரு புரட்சி வெடிக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.
இரண்டாவது சம்பவத்தில் @ifactoreal என்ற பயனர், கடந்த ஜூலை மாதம் ஒரு பதிவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டையும் ஒரு வேளை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரியா, டமாஸ்கஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்த பிரதமர் அன்வாரின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் அந்த நபர் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்று டத்தோ குமார் தெரிவித்தார்.
இவ்விரு நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய டத்தோ குமார், ஒருவர் நாளை செவ்வாய்க்கிழமையும், மற்றொருவர் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையும் தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஊடக வசதிகளைக் தவறாகப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல் மற்றும் நிந்தனைத் தன்மையிலான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக இவ்விரு நபர்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








