ஜோகூரில் குறைந்த வருமானம் கொண்ட பி40 இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த 258 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா சார்பில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்த மடிக்கணினிகளானது, யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா, யுனிவர்சிட்டி துன் உசேன் ஆன் மலேசியா , யுனிவர்சிட்டி கோலாலம்பூர் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டி மலேசியா ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனைப் பிரதிநிதித்து, மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர், இந்த மடிக்கணினிகளை விநியோகம் செய்தார்.
மேலும், தற்போது ஜோகூருக்கான விநியோகம் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டமானது அடுத்த கட்டமாக பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தகுதி பெற்ற 3,000 இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய மடிக்கணினிகளை வழங்கும் தேசிய அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மடிக்கணினி வழங்கும் திட்டமானது, கடந்த மே 10ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடங்கி வைத்த தேசியத் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
அந்நிகழ்வில், மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு 150 மில்லியனாக உயர்த்தப்படுவதாக அன்வார் அறிவித்தார்.
இந்த கூடுதல் நிதியானது, இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








