பேராக் மாநிலம் ஈப்போவில் உள்ள அன்ஜுங் பெர்சாம் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள ஏழு குடியிருப்பு பகுதிகளில், நேற்று மாலை கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய திடீர் புயல் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இது குறித்து கிந்தா உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நிலைமையை கண்காணிக்க அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், மாலை 5.05 மணியளவில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் அனுப்பப்பட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதாக ஈப்போ நகர் மன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு கருதி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.








