தெருநாய்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு முன்னுதாரணமாக புத்ராஜெயாவை தெருநாய்கள் இல்லாத நகரமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ரட்ஸி ஜிடின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஜோகூர், பத்து பஹாட் பகுதியில் 2 வயது சிறுமி ஒருவர் சுமார் 5 தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய அவர், அவ்வப்போது தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றார்.
சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம், சட்டத் திருத்தங்கள் மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் தாம் சுமார் 20 ஆண்டுகள் வாழ்ந்த போது, அங்கு ஒரு தெருநாயைக் கூட பார்க்கவில்லை என்றும் ரட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நூர் ஹைரா வாதிகா ஹாஸிமி என்ற அந்த சிறுமி, தலையிலும் முகத்திலும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தற்போது பத்து பஹாட்டில் தொடங்கப்பட்டுள்ள தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையானது, ஜோகூர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.








