ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள ஜசெக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என கோலாலம்பூர் ஜசெக பொருளாளர் பென் ஃபோங் வலியுறுத்தியுள்ளார்.
நஜிப் விடுவிக்கப்பட்டால் ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், இது கடக்கக் கூடாத சிவப்புக் கோடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் அமைச்சரவையில் இருந்து ஜசெக விலகுவது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாக அர்த்தமல்ல என்றும் பென் ஃபோங் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும், அமைச்சரவைக்கு வெளியிலிருந்து அரசாங்கத்தை ஜசெக தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஜசெக கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்களும் 7 துணை அமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








