பேரன் ஒருவனால் இரும்புச் சுத்தியலால் தாக்கப்பட்ட 79 வயது பாட்டி, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திராங்கானு டுங்குன், கம்போங் கோலா அபாங் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டிலிருந்து வெளியேற முயன்ற 25 வயது பேரனை, அவரோடு வசித்து வந்த அந்த மூதாட்டி தடுக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போது சந்தேக நபரான அந்தப் பேரன், பாட்டியை கீழே தள்ளிவிட்டு இரும்புச் சுத்தியலால் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
மாலை 6.55 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாகப் பாதிக்கப்பட்ட முதியவர் டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது சீரான நிலையில் உள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சுத்தியலைக் கைப்பற்றிய போலீஸ், மனநல நோயாளிக்கான அட்டை வைத்துள்ள அந்தப் பேரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








