கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஸ்ரீ பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் தொடர்பாக தம்மையும் ஆலய நிர்வாகத்தையும் குறிவைத்து அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
பத்துமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கும்பாபிஷேகத்திற்காக வசூலிக்கப்பட்ட 78 லட்சம் வெள்ளி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்தார்.
ஆலய திருப்பணிக்காக இதுவரை 58 லட்சம் வெள்ளி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 48 லட்சம் வெள்ளி ரொக்கமாகவும், 1.75 கிலோ தங்கமாகவும் கிடைத்துள்ளதாக அவர் விளக்கினார்.

இதுவரை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகப் பணிகளுக்காக சுமார் 34 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும், முழுமையான வரவு–செலவு கணக்கு மண்டலாபிஷேகம் முடிந்த பின்னர் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து கணக்குகளும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முறையாக பரிசீலிக்கப்படும் எனக் கூறிய நடராஜா, ஆலய நிதியில் மோசடி நடந்ததாக ஆதாரம் இருந்தால் அதை நிரூபிக்குமாறு சவால் விடுத்தார்.
“மோசடி நடைபெற்றது நிரூபிக்கப்பட்டால், அன்றே எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தனிநபர்களை குறிவைத்து வெளியிடப்படும் அவதூறுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட நபர்களை டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தேவஸ்தானப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.








