தாபோங் ஹாஜி வாரியம் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் நடத்தி வரும் விசாரணைக்கு உதவும் வகையில், முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் டாத்தோ ஸ்ரீ ஜமீல் கிர் பஹாரோம்மை ஐந்து நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்ட ஜமீல் கிர் பஹாரோம், எஸ்.பி.ஆர்.எம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் எஸ்ரீன் ஜகாரியா தடுப்புக்காவலுக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
60 வயதுக்கும் மேற்பட்ட அந்த முன்னாள் அமைச்சர், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
சவுதி அரேபியாவில் தாபோங் ஹாஜியின் ஹோட்டல் குத்தகை விவகாரம் தொடர்பில் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை நடைபெற்று வருகிறது. .
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனையும், லஞ்சத் தொகையின் ஐந்து மடங்குக்குக் குறையாத அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்க வகை செய்யும் எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜமீல் கிர் பஹாரோம், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.








