நேபாளில் மாயமான மலேசியர்களைத் தேட ஸ்மார்ட் குழுவை உடனடியாக அனுமதிக்க வேண்டும் டாக்டர் மணிவண்ணன் அவசர கோரிக்கை*
நேபாளில் ஏற்பட்ட பேரழிவில் மலேசியர்கள் காணாமல் போய் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையில் மலேசியாவின் SMART மீட்புக் குழுவை அனுமதிப்பதில் நேபாள அரசின் தாமதம் குறித்து குடும்பங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
மாயமான மலேசியர்களின் குடும்பங்களின் பிரதிநிதி டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில் நேபாள அரசின் இந்தத் தாமதம் மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“சம்பவம் நடந்து ஒரு வாரமாகிவிட்டது. பாதுகாப்பாக அவர்களை மீட்பதற்கான முக்கியமான காலம் வேகமாகக் குறைந்து வருகிறது” என்று மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமக்குக் கிடைத்த தகவலின்படி, நேபாள அரசு சில அண்டை நாடுகளின் மீட்புக் குழுக்களை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதித்துள்ள நிலையில், மலேசியாவின் ஸ்மார்ட் குழுவுக்கு இன்னும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவின் ஸ்மார்ட் குழுவை நேபாளத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதுடன், குடும்பங்களுக்கு தொடர்ந்து தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினரிடமிருந்து டி.என்.எ மாதிரிகள் பெறும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. குடும்பங்கள் இன்னும் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.








