ஜோகூர் மாநிலம், பெனாவார், தஞ்சோங் பாலோ-விலுள்ள தஞ்சோங் லோம்பாட் கடற்கரையில் இன்று காலை நீந்தச் சென்ற 16 வயதுடைய நான்கு சிறார்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று காலை 8.19 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பண்டார் பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த அந்த ஆறு சிறார்கள் ஆபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகின்றது.
எனினும், அவர்களில் இருவர் காலை 7.45 மணியளவில் பொதுமக்களால் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், காணாமல் போன மற்ற நால்வர் அலிஃப் தக்கியுதீன், ஹைமான், அதீப் ரிஸ்க்கி மற்றும் தஃகீஃப் ரய்யான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று அந்தப் பகுதியில் முகாமிடச் சென்ற 15 சிறுவர்கள் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நால்வரையும் தேடும் வகையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.








