மலாக்கா, ஜாசின் அருகே கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 41 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.
நூரிஹ்மால் பஹாருதீன், என்ற அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9.15 மணியளவில் ஜாசின், கம்போங் ஆயர் மெர்பாவ் – சாலையில் சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் ஆம்புலன்ஸை கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 18 வயது அமிருல் அஷ்ராஃப் அஸிசான் என்பவர் உயிரிழந்தார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படலாம்.
அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க அரசுத் தரப்பு 8 ஆயிரம் ரிங்கிட் பிணை கோரிய நிலையில், ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை நிர்ணயித்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் இடைநீக்கம் செய்தது.








